Tuesday, September 25, 2007

ராம்விலாஸ் வேதாந்தியைக் கைது செய்க! - திராவிடர் கழகம் புகார் மனு

முதல்வர் கலைஞரை கொலை செய்யத் தூண்டிய ராம்விலாஸ் வேதாந்தியைக் கைது செய்துநடவடிக்கை மேற்கொள்க!
சென்னை காவல்துறை ஆணையரிடம் திராவிடர் கழகம் புகார்மனு

சென்னை, செப். 24- தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களைக் கொலை செய்யத் தூண்டிய விசுவ இந்துபரிசத்தின் முக்கிய தலைவரும், பி.ஜே.பி., சார்பில் மக்களவையில் இருமுறை உறுப்பினராக இருந்தவருமான ராம்விலாஸ் வேதாந்தியைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் சென்னை - மாநகரக் காவல் துறை ஆணையரிடம் இன்று புகார் மனு கொடுத்தார். வழக்கறிஞர் த. வீரசேகரன் உடனிருந்தார்.

புகார் மனு விவரம் வருமாறு:விசுவ இந்து பரிசத் கேந்திரா மார்க்தர்ஷக் மண்டல் தலை வரும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவருமான ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் தி.மு.க., தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலையையும், நாக்கையும் துண்டித்து வருபவர்களுக்கு (பாட்வா) அயோத்தியில் உள்ள சாமியார்கள்மூலம் எடைக்கு எடை தங்கம் பரிசளிக்கப்படும் என்று அறிவிப்புக் கொடுத்துள்ள தானது - பச்சையாக கொலையைத் தூண்டும் வன்முறை செயலாகும்.இணைய தளத்திலும், ஏடுகளிலும் இந்தச் செய்தி விரிவாக வந்துள்ளது .கொலை வெறி, வன்முறையைத் தூண்டியுள்ள ராம் விலாஸ் வேதாந்தி என்பவரைக் கைது செய்து, தமிழகம் கொண்டு வந்து, சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.-

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, September 22, 2007

இராமாயணத்தைப் பற்றிய அறிஞர்கள் கருத்து -2

ஆரியரல்லாதார் பட்ட பாடுஆரியல்லாத இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும், ஆரியப் புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதவர்களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூக், ஆரிய எதிரி என்ற பெயர்கள்தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் என்ற பெயர்களாக மாறிவிட்டன.
(சர். வில்லியம் வில்சன்ஹண்டர், கே.சி.எஸ்.அய்., சி.அய்.ஈ., எம்.ஏ., ஆக்ஸன் எல்.எல்.டி எழுதிய இந்திய மக்களின் சரித்திரம் என்னும் நூலின் 41 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------------------------------------
இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவு படுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.
(பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட
மலபார் குவாட்டர்லி ரிவ்யூ என்னும் புத்தகம்).
------------------------------------------------------------------------------------
நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை. ஒன்றையும் நம்புவதில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக.
(ரிக் வேதம் அதிகாரம் 10 சுலோகம் 22-8).
------------------------------------------------------------------------------------
ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.
(ராகோசின் எழுதிய வேதகால இந்தியா என்னும் புத்தகம்).
------------------------------------------------------------------------------------
இந்திய அய்ரோப்பியர்களால், அதாவது, ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்கள் (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக் கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப் பட்டிருக்கிறது.
(பால்மாசின் அவர்செல் எழுதிய புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்
என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்.)
------------------------------------------------------------------------------------
மேற்கு திபெத்தையும், ஆஃப்கானிஸ்தானத்தையும் தாண்டி, முதன் முதல் இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள், சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில் நுழைந்த இவ் வெள்ளையர்கள் மக்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலியவைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்.
(சர் ஹென்றி ஜான்ஸ்ட்டன், ஜி.சி.எம்., ஜி.கே.சி.ஈ., 1937 இல் எழுதிய இந்தியாவில் அன்னியர்கள் என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்.)
------------------------------------------------------------------------------------
இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ-ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும் . . . இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்சதந்திரம், அராபியன் நைட் முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.
(பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள
டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 76-77).
------------------------------------------------------------------------------------
இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.
(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 82)
------------------------------------------------------------------------------------
ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும், மாறுபாட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற்கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்ட கால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த - பெரிய - பிளவு ஏற்பட்டது.
(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 62).
------------------------------------------------------------------------------------
இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று.
(திரு. நீலகண்ட சாஸ்திரி).
------------------------------------------------------------------------------------
இராமாயணம் என்ற கற்பனைக் கதையின் அடிப்படை யாதெனில், திராவிடப் பழங்குடி மக்களுக்கும், ஆரியப் படையெடுப்பாளருக்கும் இடையே நடந்த போராட்டமே தவிர வேறல்ல.
(சர். ஃபிரோஸ்கான்நன் (முன்னாள் மேற்கு பஞ்சாப் முதலமைச்சர்)
1941 இல் எழுதிய இந்தியா என்ற புத்தகத்தில் பக்கம் 8).
------------------------------------------------------------------------------------
இவ்வாரியப் பார்ப்பனர், ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி அவர்கட்குள் பல்வேறு சமயப் பிரிவு, சாதிப் பிரிவுகளை உண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே, தத்தம் சாதியே உயர்ந்ததென்று சொல்லி, ஒருவரையொருவர் பகைத்துப் போராட வைத்து, அப்போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை - கண்ணன் கதை - கந்தன் கதை - விநாயகன் கதை - காளி கதை முதலிய பல்வேறு கட்டுக் கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து, அவற்றை ராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி, அவை தம்மை மற்றைய எல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட்டார்கள்.
(மறைமலையடிகள் - அறிவுரைக் கொத்து)
------------------------------------------------------------------------------------
ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்து வந்த சூரன் - இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவாராயினர்.
(மறைமலையடிகள் - வேளாளர் நாகரிகம் பக்கம் 61).
------------------------------------------------------------------------------------
ஆரியர் வாய்ந்த பார்ப்பனர்கள், கடவுள் அதோ, அவருக்கு நேரே வந்து அருள்புரிந்தார்; இதோ, இவருக்கு நேராக அருள்புரிந்தார் என்று பொய்யான புராணக் கதைகள் பலவற்றைக் கட்டி விட்டனர்.
(மறைமலையடிகள் -
'கடவுளுக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா' பக்கம் 33-34.)
------------------------------------------------------------------------------------
இராவணன் தேவர்களையும், ரிஷிகளையும் தொல்லைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசரர் - தேவர் என்ற சொற்கள் இரண்டு விதமான இனத்தாரை - நாட்டாரை குறிப்பிடுவதாகும். ஆரியர்கள் தங்கள் இனத்தை தேவர்கள் என்றும், தங்கள் எதிரிகளை அசுரர்கள் - அரக்கர்கள் என்றும் வர்ணித்தார்கள்.
(திரு ஜே.எம். நல்லுசாமிப் பிள்ளை - இராமாயண உள்ளுரை பொருள் என்ற நூலின் முன்னுரையில்)
------------------------------------------------------------------------------------
மத நம்பிக்கை ஒருபுறமிருக்க, இராமாயணக் கதையானது உவமையுரையோ சரித்திரமோ அல்ல; கட்டுக் கதையை அடிப்படையாகக் கொண்ட கவிதையே தான்.
(கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி - இந்திய சரித்திரம் முதல் பாகம் பக்கம் 34)
------------------------------------------------------------------------------------
புதிய வரவினராகிய ஆரியர்க்கு அனுகூலராயும், பிரதி கூலராயுமிருந்த திராவிடப் பெருஞ்சாதி வகுப்பினரை ஆரியக் கவி அரக்கர் என்றும், குரங்கினம் என்றும் இறுத்துக் கூறியது, அவர்களுக்குரிய சாதித் துவேஷம், செய்நன்றி கொல்லல் ஆகிய குண தோஷத்தைக் குறிக்குமேயன்றி மற்றொன்னையுங் குறிப்பதன்று.
(வெ.ப.சுப்பிரமணிய முதலியார் 1908 ஆம் ஆண்டில் எழுதிய
இராமாயண உள்ளுரைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் பக்கம் 19)
------------------------------------------------------------------------------------
இராமாயணம் கட்டுக் கதையாயினும், இராவணன் என்ற பாத்திரம் தலை சிறந்தது என்பதில் அய்யமில்லை. திராவிடர்கள் இராவணனை ஓர் இணையற்ற வீரனாகவும், தென்னிந்தியாவின் மீது ஆரியர் படையெடுத்ததைத் துணிவுடன் எதிர்த்து நின்ற பேரரசனாகவும் கருதியிருக்கின்றனர்.
(எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 1928 இல் எழுதிய
இராவணப் பெரியார் பக்கம் 78).
------------------------------------------------------------------------------------
மகாபாரதத்தில் இருப்பது போலவே, இராமாயணத்திலும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனைகளே. இரண்டிலும் சரித்திர சம்பந்தமானது ஒன்றுமேயில்லை.
(ஆர்.சி. தத், பழைய இந்து நாகரிகம் பக்கம் 138)
------------------------------------------------------------------------------------
அண்ணனைக் காட்டிக் கொடுத்துவிட்டுப் பட்டத்தைப் பெறும் தம்பி பக்தன் என்று சொல்ல முடியுமா? பக்தி என்றும், லோக நியாயம் என்றும் யுக்தி செய்து கொண்டு யாரும் எளிதிலே நாட்டுக்கும், சகோதரர்களுக்கும் துரோகம் செய்யத் துணிந்துவிடலாமே.விபீஷணனுடைய செயலைப் பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத் துரோகிகள் ஆகிவிட்டார்கள்.
(வ.ரா. எழுதிய கோதைத் தீவு பக்கம் 24, 25).
------------------------------------------------------------------------------------
புராணங்களும் - இதிகாசங்களும் மக்களின் மெய் சரித்திரமல்ல. இவை மக்கள் வரலாற்றை அறிவதற்கோ, சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகா. இவை வெறும் மத இலக்கியத் தொகுப்புகளே.
(திரு. முன்ஷி, இந்திய மக்களின் கலாச்சாரமும் - வரலாறும் பக்கம் 8)

Thursday, September 20, 2007

இராமாயணம் உண்மைக் கதையா?

இராமாயணத்தைப் பற்றிய அறிஞர்கள் கருத்து


இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர்களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியளார்களும், பேரறிஞர்களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம்.
-------------------------------------------------------------------------------------
தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
(ரொமேஷ் சந்திர தத்தர் சி.அய்.ஈ., அய்.சி. எஸ். எழுதிய
புராதன இந்தியா - 52 ஆவது பக்கம்)
-------------------------------------------------------------------------------
திராவிடர்கள் தங்கள் மீது படையெடுதது வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.
(டாக்டர் ரொமேஷ் சந்திர மஜூம்தார் எம்.ஏ. வின்
பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.
(பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய,
திராவிடரும் ஆரியரும் 24 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியர்களல்லாதவாகளையே குறிப்பதாகும்.
(ரொமேஷ் சந்திர தத்தர் எழுதிய,
பண்டைய இந்தியாவின் நாகரிகம் 139-141 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
(சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் -
இராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதனக் குடி மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்.தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதனக் குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.
(1922 - ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ்
பழைய இந்தியாவின் சரித்திரம் என்னும் புத்தகத்தில்).
-------------------------------------------------------------------------------
பகைமைக்குக் காரணம்ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணமாகும்.
(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய
இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தில் 69 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
இராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்திற்கும், ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான இராமன், இராவணன் ஆகியவர்களால் ) நடத்தப்பட்ட போராட்டமாகும்.
(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய
இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தின் 141 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும் இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசப்படும் பாஷை
(சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய இங்கிலீஷ் அகராதியின்
பக்கம் 67 இல் இருக்கிறது.)
-------------------------------------------------------------------------------
ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து, முடியாமல் போனதால், ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.
(பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம்-3, பக்கம் 10)
-------------------------------------------------------------------------------
தமிழர்கள், ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்.
(டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள் எழுதிய
தென்னிந்தியாவும் இந்தியக் கலையும் என்ற புத்தகத்தின் 3 ஆவது பக்கம்)
-------------------------------------------------------------------------------
இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகம் அடைந்தவர்களாய் இருந்தார்கள்.
(பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய இந்திய சரித்திரம், முதல் பாகம்
என்னும் புத்தகத்தின் 10 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்..
(ஜோஷி சந்தர் டம் எழுதிய இந்தியா அன்றும் இன்றும்
என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
அசுரர்கள் யார்ஆரியக் கடவுளாகிய இந்திரனையும் இதரக் கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின் பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப் பகை இருந்து கொண்டே இருந்தது.
(ஏ.சி.தாஸ். எம்.ஏ.,பி.எல்., எழுதிய ரிக் வேத காலத்து இந்தியா
என்னும் புத்தகத்தில் 151 ஆவது பக்கம்.)
-------------------------------------------------------------------------------
ஆரியர்களால் வெல்லப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.
(சி.எஸ். சீனிவாசாச்சாரி, எம்.ஏ., எம்.எஸ்., ராமசாமி அய்யங்கர், எம்.ஏ., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, இந்திய சரித்திரம் - முதல் பாகம் என்னும் புத்தகத்தில் இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்).
-------------------------------------------------------------------------------
ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களை விட முன்னேற்றமாக திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.
(எச்.ஜி. வெல்ஸ் எழுதிய உலகத்தின் சிறு சரித்திரம்
என்னும் புத்தகத்தின் 105 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.
(நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா வால்யூம். 2 (1925) பக்கம் 273)
-------------------------------------------------------------------------------
இராமாயணம் வரலாற்றை உணர்த்தும் இதிகாசமே இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.மகாபாரதம் கங்கைநதி வெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.


(முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய
இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல், எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்த கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்.
(பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865 இல் எழுதிய
விரிவான இந்திய சரித்திர முதற் பாகம் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்.)
-------------------------------------------------------------------------------
விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.
(இ.பி.ஹரவெல் 1918 இல் எழுதிய இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம் என்னும் புத்தகத்தின் 32 ஆவது பக்கம்.)
-------------------------------------------------------------------------------
பாரத இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டு மிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை - திராவிட நாட்டைப் பற்றியே யாகும்.
(ஜி.எச். ராபின்சன், சி.அய்.ஈ. யால் எழுதப்பட்ட
இந்தியா என்னும் புத்தகத்தின் 155 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
வட இந்திய திராவிடக் கலைவட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்க வில்லை.
(தமிழ்ப் பேராசிரியர் கே.எம். சிவராஜ பிள்ளை, பி.ஏ., எழுதிய
பண்டை தமிழர்களின் வரலாறு என்னும் புத்தகத்தின் 4 ஆம் பக்கம்.)
-------------------------------------------------------------------------------
பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி, தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் இராட்சசி என்று எழுதியிருக்கிறான். இராட்சதன் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.
(நாகேந்திரகோஷ், பி.ஏ.,பி.எல். எழுதிய
இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும் என்ற புத்தகத்தின் 194 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
இராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
(ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய சரித்திரக்காரர்களின்
உலக சரித்திரம் வால்யூம் 2 இல், பக்கம் 521).
-------------------------------------------------------------------------------
இந்தியாவின் தென் பாகத்திலுள்ள நாடுகளை நோக்கிப் பிராமணர்கள் வெற்றியோடு வரும்போது ஆந்திர, சேர, சோழ, பாண்டிய ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.
(வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்டு எழுதிய
இந்திய சரித்திரம் 14 ஆவது பக்கம்).
-------------------------------------------------------------------------------
இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.


(இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்திய பதிப்பு வால்யூம் 1 இல்
405 ஆவது பக்கம்.)
(தொடரும்)
நன்றி; விடுதலை 18-09-07

Thursday, September 6, 2007

பாரீசிலும் பகுத்தறிவுக் கொள்கை

பார்ப்பனர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், எந்த ஊருக்குச் சென்றாலும், எங்கு குடியிருப்புகளைப் புதிதாக அமைத்தாலும் அவர்கள் செய்கின்ற முதல் வேலை -முக்கியக் கடமையாக நினைக்கின்ற வேலை ஒரு கோயிலை எழுப்புவதுதான்.

நியூயார்க் சென்றாலும் ஒரு பிள்ளையார் கோயிலைக் கட்டி, தமிழ்நாட்டிலிருந்து பார்ப்பனப் புரோகிதர்களைத் தருவித்து, மகாகும்பாபிஷேகம் செய்துவிடுவார்கள்.

பக்தியைப் பரப்புதல் என்பது அவர்களின் கலாச்சாரத்தை நிலை நிறுத்துவது என்பதை உறுதியாக மனதில் வைத்து அவர்கள் செயல்படுகிறார்கள்.
இன்னொரு பக்கத்தில் பாரதி சங்கம் என்று வைத்து சன்னமாக தங்களின் சமஸ்கிருத மனப்பான்மை வேலையைச் செய்து வருவார்கள்.

தமிழர்களில் மெத்த படித்தவர்களாக இருந்தாலும், கை நிறைய சம்பாதித்தாலும் பார்ப்பனர்களின் இந்த அணுகுமுறையில் உள்ள சூட்சமத்தை உணர்ந்து கொள்ளாமல் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விடுவார்கள்.

'பாரீசில் விநாயகன் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார் கள். பார்ப்பனீயத்தைப் பரப்ப அவர்கள் முதலில் கையில் எடுத்துக் கொள்வது இந்த விநாயகனைத்தான். மகாராட்டிராவில் பாலகங் காதர திலகரும் இதனைத்தான் செய்தார். ஆர்.எஸ்.எஸ்., தோன்று வதற்குத் தோன்றாத் துணையாக இருந்தது திலகரின் இந்த முன்னோட்டமான நடவடிக்கைதான்!

பாரீசில் பிள்ளையார் விழா கொண்டாடுவதைக் கண்டித்தும், ஆபாச விநாயகனின் பிறப்பைக் குறித்தும் பாரீசில் உள்ள பகுத் தறிவாளர்கள் துண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். தோழர்கள் தமிழச்சி, மாசிலா ஆகியோர் மேற்கொண்டுள்ள பணிக்காக உலகம் முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களால் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

அவர்கள் வெளியிட்டுள்ள துண்டறிக்கையில் காணப்படும் கருத்துகள் சிந்தனைக்கு விருந்தானவை; விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவையாகும்.
"பிறந்து வாழ்ந்த நாட்டில் தான் சுயமரியாதை இழந்து மானங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தோம். வந்த இடத்திலும் 'சனியனை இழுத்துக் கொண்டு வர வேண்டுமா? கொஞ்சம் சிந்தியுங்கள். நம் அறியாமையையும், பக்தியின் பெயரால் நடக்கும் கொள்ளைகளையும் ஒரு சில வஞ்சகர்கள் அனுபவிக்கவிடலாமா? உதாரணமாக இலங்கையிலிருந்து 1971-இல் பாரீசுக்கு இடம் பெயர்ந்த ஒரு நபர் 1985-இல் மாணிக்க விநாயகன் ஆலயம் என்ற பெயரில் ஒரு கோயிலை நிர்மாணித்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய அவருடைய வசதி வாய்ப்பின் நிலை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கொண்டு போய்க் கொட்டிய தெல்லாம் கடவுளுக்கா போய்ச் சேருகிறது? தமிழா! கொஞ்சம் சிந்தித்துப் பார்!.. ஒழுக்கம், நாணயம் குறையவும் பலாத்கார உணர்ச்சியும், கெடுதல் புத்தியும் வளர்வதற்கும் யார் காரணமாகி றோம்? பக்தி என்னும் நம் அறியாமையால், மதம் ஜாதி திணிக்கப்பட்டு சிந்திக்கும் திறனையும், விழிப்புணர்வையும் சீரழிப்பதற்கு இவை இரண்டும்தான் காரணம்" என்று அந்தத் துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் அவர்கள் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்றபோதுகூட இதே கருத்தைத்தான் அங்குள்ள தமிழர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.

பிறந்த நாட்டில் வறுமை கொத்தித் தின்ற நிலையில், வெளி நாட்டுக்குப் பிழைக்கப்போன இடத்தில்கூட, முட்டாள்தனத்தையும், பிற்போக்குத் தனத்தையும் தங்களோடு மூட்டை கட்டிக்கொண்டு போகும் தமிழர்களை நினைத்தால் வேதனையும், வெட்கமும் தான் நம்மைத் தொலைத்து எடுக்கிறது.

என்ன செய்வது! தலைமுறை தலைமுறையாகப் பார்ப்பனீயம் நம் மக்களின் மண்டைக்குள் திணித்த மூடத்தன கசுமாலங்களை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந்திட முடியுமா?தப்பித் தவறி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடையே பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களாகிய தமிழச்சி, மாசிலாவைப்போல் செயல்பட்டால் அது மனிதகுலத்துக்கே செய்யப்பட்ட மாபெரும் அறிவுத் தொண்டாகும். தனி இணை யத்தையே உண்டாக்கிச் செயல்படுகின்றனர் பாரீசில். "பெரியார் விழிப்புணர்வு இயக்கம் என்று பொருத்தமான பெயரையும் கொடுத்துள்ளனர்.

தந்தை பெரியார் மறைந்தாலும், அவர்கள் உருவாக்கிய கொள்கை உலகம் முழுவதும் பரவிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

பெரியார் பன்னாட்டு மையம் உலகின் பல நாடுகளிலும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. டில்லியிலும் விரைவில் பெரியார் மையம் செயல்பட உள்ளது. இந்தியாவின் நான்கு திசைகளிலும் இத்த கைய மையங்களைத் தொடங்கும் திட்டமும் கழகத்திடம் உள்ளது. தந்தை பெரியாரை உலக மயமாக்கவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

'விடுதலை' தலையங்கம்
(செப்டம்பர்-6, 2007)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...