Friday, November 2, 2012

சாமிகளின் பிறப்பும் இறப்பும் - 2

எத்தனை எத்தனை சாமியடா?


சாமிகளில் ரெண்டு வகை உண்டு.
ஒன்று ஏழைச்சாமிகள்.
இன்னொன்று பணக்காரச் சாமிகள்.
ஏழைச்சாமிகளை ஏழைகள் கும்பிடுவார்கள். பணக்காரச்சாமிகளை பணக்காரர்கள் கும்பிடு-வார்கள். பணக்காரச் சாமிகளைக் கும்பிட்டால் நாமும் அவர்-களைப் போல பணக்காரர் ஆகிவிடலாமே என்று ஆசைப்பட்டு ஏழைகளும் கூட்டம் கூட்டமாகப் பணக்காரச் சாமிகளைக் கும்பிடப் போகிறார்கள். ஆனால் பணக்காரர்கள் யாரும் போனால் போகட்டும் என்றுகூட ஏழைச்-சாமிகளைக் கும்பிட வருவதில்லை. அதுகளைக் கும்பிட்டு நாமும் ஏழையாகிவிட்டால் என்ன செய்வது என்று பயம் போலும்.
அதுசரி ஏழைச்சாமி என்றால் யார்? பணக்காரச் சாமி என்றால் யார்?
ஏழை என்றால் யார்? பணக்காரன் என்றால் யார்? என்பது தெரிந்தால் சாமிகளையும் அடை-யாளம் பார்த்துவிடலாம்.
யாரை நாம் ஏழை என்கிறோம்? சொந்த வீடு இல்லாதவர்கள், ஒரு சைக்கிள் கூட இல்லா-தவர்கள், செருப்பு கூட இல்லாதவர்கள், நல்ல வருமானம் காசு இல்லாதவர்கள், தினசரி மூணு வேளையும் சாப்பாடு கூட சரியாகக் கிடைக்கா-தவர்கள். இவர்களைத்தான் ஏழைகள் என்கிறோம்.
யாரைப் பணக்காரர்கள் என்கிறோம்? சொந்-தமாகப் பெரிய வீடு, பங்களா, கார்வசதி உள்ள-வர்கள், வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் தினசரி மூக்குப்பிடிக்க சாப்பிட வசதி உள்ளவர்-கள், பெட்டி பெட்டியாகப் பணம் வைத்திருப்பவர்கள், பேங்க்கில் நிறையக் காசு வைத்திருப்பவர்கள் இவர்களைத்தான் பணக்-காரர்கள் என்கிறோம்.
இப்பொழுது நம் ஊர்களில் உள்ள சாமிகளைப் பற்றி எண்ணிப் பாருங்கள். ரோட்-டோரம் நடுகல்லாக உள்ள சாமிகள், சின்னக் கிராமங்-களில் கோயில் இல்லாமல் சும்மா வெறும் கல்லாக நிற்கும் சாமிகள், பீடமாகக் கட்டி வெயிலிலும் மழையிலும் கூரைகூட இல்லாமல் நிற்கும் சாமிகள்; இந்த சாமிகளுக்கெல்லாம் சொந்த வீடு இல்லை அல்லவா? தினசரி பூஜை செய்து அதுகளுக்குப் படையல் பொங்கல், சுண்டல் யாரும் தருவதில்லை.
வருசத்தில் ஒருநாள் இந்தச் சாமிகளுக்கு திருவிழா நடக்-கும். அப்போதுதான் இந்தச் சாமிக-ளுக்குச் சாப்-பாடு கி-டைக்கும். மத்த நா-ளெல்லாம் இந்தச் சாமி--கள் பட்டினி-தான். நம் ஊர்-களில் வெயி-லில் கிடக்கும் இந்த மாரி-யம்மன், காளி-யம்மன், மாடன், காடன், இசக்கி, சங்கிலிக்-குப்பன், பூதத்தான், தீப்பாஞ்ச அம்மன், கும்பா-ளம்மன், நாட்ட-ராயன், கம்பராயன், கருப்பராயன், முனியப்பன், பெரியாண்டவர், பெரியாண்டிச்சி, மதுரை வீரன், அய்யனார், குட்டியாண்டவர், ஏழு கன்னிமார், மாத்தையன், அய்கோர்ட் ராஜா, கவர்னர் பாடிகாட் என்றும் இன்னும் இதுபோலவும் ஏராளமான ஏழைச்சாமிகள் நம் ஊர்களில் இருக்கிறார்கள். எண்ணி முடியாது. ஒரு மாவட்டத்துக்கு நூறு சாமியாச்சும் இருக்கும். இவர்களுக்கு வாகன வசதியும் கிடையாது.
இன்னொரு புறம் பெரிய பெரிய கோபுரங்கள், பிரகாரங்களோடு கூடிய பெரிய்ய கோவில்கள், உயரமான சர்ச்சுகள் இருக்கின்றன. அவற்றுக்குள்ளே கர்ப்பக்கிரகத்துக்குள்ளே, பீடத்திலே இருக்கும் பணக்காரச் சாமிகள் அவர்களுக்கு தினசரி பூஜை உண்டு, சுண்டல் உண்டு, அப்பம் உண்டு, இந்தச் சாமிகள் பிரயாணம் _ சுற்றுலா செல்ல அலங்காரமான தேர்கள் சப்பரங்கள் என்று வாகனங்களும் உண்டு.
இந்தச் சாமிகளின் கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்கள் நிரம்பி வழியும். இதெல்லாம் நிறைய காசுள்ள பணக்காரச்சாமிகள், சிவன், கிருஷ்ணன், பெருமாள், ஏசு, அல்லா(உருவமில்லாத சாமி), மாதா, காமாட்சி, மீனாட்சி, சுப்பிரமணியர் என்று பல பேர்களில் இந்தச் சாமிகள் நம் ஊர்களில் கொலு வீற்றிருக்கின்றன.
ரொம்ப காலம் ஏழையாகவே இருந்து திடீர்ப் பணக்காரர் ஆகி-விடும் சாமிகளும் ஒன்றி-ரண்டு இருக்கும். அதைக்-கும்பி-டுகிற மக்கள் கொ-ஞ்சம் வசதி வந்து-விட்-டால் தங்-கள் சாமி-களையும் நல்-லா கவனிப்-பார்-கள் அல்-லவா? ஆதி-ப-ராசக்தி, கொல்லூர் -_ மூகாம்பிகை போன்றவை சில உதாரணங்கள்.
சாமிகளில் எப்படி ஏழை _ பணக்காரர் வித்தி-யாசம் வந்தது?
இதுமட்டுமல்ல, சாமிகளில் சாதி வித்தியாசமும் உண்டு. மேல் சாதிச்சாமிகள், கீழ்ச்சாதிசாமிகள் என்றும் உண்டு. பொதுவாக மேலே குறிப்பிட்ட ஏழைச்சாமிகள் எல்லாமே கீழ்ச்சாதி என்று ஒதுக்கப்பட்ட மக்களால் வணங்கப்படும் சாமி--க-ளாகும். எனவே அந்தச் சாமிகளும் ஆட்டோ-மேட்டிக்காக கீழ்ச்சாதிச் சாமிகளாகி-விட்டன.
சாதிகளில் உயர்ந்த சாதி எனப்படும் சாதியார் இக்கீழ்ச்சாதிச் சாமிகளைக் கும்பிட மாட்டார்கள். இச்சாமிகளின் பெயர்களை தம் பிள்ளை-களுக்குச் சூட்டவும் மாட்டார்கள். சுடலைமாட அய்யங்கார் என்றோ கருப்பணசாமி அய்யர் என்றோ முனியப்ப ஆச்சாரியார் என்றோ உலகத்தில் யாருக்கும் பேர் இருக்காது.
மனிதனை விட சாமி உயர்ந்தவர்தானே? அப்படி-யானால் எந்தச் சாதிக்காரர் ஆனாலும் எல்லாச் சாமி பேரையும் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும்தானே? ஆனால் நம் ஊர்களில் யாரும் அப்படி வைப்பதில்லை அல்லவா?
சாமிகளைப் பெத்து வளர்த்தது மனிதர்கள். ஆகவே மனிதர்களிடம் உள்ள எல்லா கூத்துக்களும் சாமிகளிடமும் இருக்கும். அடடா... குழப்பமாக இருக்கே! மனிதர்களைப் படைத்ததுதானே சாமி. நீங்க சாமிகளைப் படைத்தது மனிதன் என்று சொல்கிறீர்களே?
சரி, சில சாமிகள் பிறந்த கதையை இப்போது பார்ப்போம். அதற்குப் பிறகு நாம் இந்தக் கேள்விக்கு மறுபடியும் வருவோம் சரியா?
முதலில் மதுரை வீர சாமியின் கதையைப் பார்ப்போம். மதுரைப்பக்கம் ஒரு முந்நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதன்தான் மதுரைவீரன். அவர் சக்கிலியர் எனப்படும் அருந்ததியர் சாதிக்காரர். சக்கிலியர் என்றால் உங்களுக்குத் தெரியும்தானே? கக்கூஸ் சுத்தம் செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது, நாம் இருந்து வைக்கும் மலத்தை அள்ளிச் சென்று ஊருக்கு வெளியே கொட்டுவது, செருப்புத் தைப்பது, சுடுகாட்டில் பிணங்களை எரிப்பது போன்ற வேலைகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. மிக மிக முக்கியமான இந்த வேலைகளைச் செய்கிறவர்கள் இந்தச் சக்கிலியர் சாதிக்காரர்கள்தான்.
ஆனால் இவர்களை நாம் மதிப்பதில்லை. அடுத்தவர் இருந்து வைத்த அசிங்கத்தில் நாம் தெரியாமல் காலை வைத்துவிட்டால் அச்சச்சோ என்று ஓடிப்போய் காலை உடனே கழுவப்போகிறோம். ஆனால் ஊரார் எல்லாருடைய மலத்தையும் சுத்தம் செய்கிற இந்த சக்கிலியர் உண்மையில் எவ்வளவு பெரிய மனசுக்காரர்கள்! நான் மாட்டேன் போ என்று இவர்கள் சொல்லி-விட்டால் என்ன ஆகும்.
ஊரே நாறிப்போகு-மல்லவா? அப்படிப்பட்ட புனிதமான இவர்களை நமக்கு ஆய் கழுவி சுத்தம் செய்கிற அம்மா மாதிரியான இவர்களை சாதியில் எல்லாம் கடைசியில் கீழே வைத்திருக்கிறோம். எவ்வளவு மோசமான மனிதர்கள் நாம்? இந்த கக்கூஸ் அள்ளும் வேலையும் கூட சிலநூறு ஆண்டுக-ளுக்குமுன் அவர்கள்மீது கட்டாயமாக திணிக்கப்-பட்ட வேலைதான்.
இந்த சக்கிலியர் சாதியில் பிறந்த மதுரைவீரன் உண்மையிலேயே பெரிய வீரன். கள்ளர்களை அடக்கினான். நாட்டுக்குப் பாதுகாப்பாக இருந்தான். அவன் மீது மதுரை மன்னரின் மகள் பொம்மி காதல் கொண்டாள். அய் லவ் யூ சொன்னாள். சரி என்று மதுரை வீரனும் சொல்ல ரெண்டு பேரும் கலியாணம் செய்து கொண்டார்கள். இப்படி ஒரு கீழ்ச்சாதிக்காரன் பொம்மியைக் கல்யாணம் செய்து விட்டானே என்று மேல்சாதிக்காரர்களுக்குக் கோபம். ஆகவே அவனைப் பிடித்துக் கொலை செய்துவிட்டார்கள்.
நாம் எத்தனை சினிமாக்களில் பார்க்கிறோம். காதலிப்பது அய் லவ் யூ சொல்வது. பிடித்திருந்தால் கல்யாணம் செய்து கொள்வது எல்லாம் பெரிய தப்பா? ஆனால் அன்றைக்கு போலீஸ் ஸ்டேசன், சட்டம், நீதி எல்லாமே மன்னர்தான். ஆகவே மதுரை வீரன் மாண்-டான், மக்கள் அழுதனர். காதலிச்சது குற்றமா? இப்படிப் பண்ணிட்-டாங்களே என்று கதறினார்கள். ஆனால் மன்னனை மீறி அன்றைக்கு ஒண்ணும் செய்ய முடியாதல்லவா? எதிர்த்துப் பேசினாலே வெட்டிப் போடுவான்.
ஆகவே மக்கள் யோசித்தார்கள். மதுரை வீரனை ஒரு சாமியாக்கி கும்பிட ஆரம்பித்தார்கள். மன்னனால் இப்போது என்ன சொல்ல முடியும்? சாமி கும்பிடுவதை தடுக்க முடியாது. அது சாமி குத்தம் ஆகிப் போகும். மன்னனால் கொல்-லப்பட்ட ஒரு மனிதனை ஏழை எளிய மக்கள் சாமியாக்கிக் கும்பிட்டார்கள். அவர்களின் எதிர்ப்பை அப்படித்தான் அன்றைக்கு காட்ட முடிந்தது. இப்படியாகத்தான் இன்றைக்கு வரைக்-கும் மதுரை வட்டாரத்திலும் தென் மாவட்டங்களிலும் மதுரை வீரசாமி வழிபடப்பட்டு வருகிறார்.
(தொடரும்)
- ச. தமிழ்ச்செல்வன்
Share

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...