Wednesday, July 9, 2014

இஸ்லாம் இந்து மத ஒற்றுமை வேற்றுமை

இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை

இஸ்லாம் மத ஒழுக்கம்
1. மதுபானம் கூடாது.

2. சூதாடுதல் கூடாது.

3. விபசாரம் கூடாது.

4. வட்டி வாங்குதல் கூடாது.

5. போர் செய்தல் கூடாது.

இந்து மத ஒழுக்கம்

1. கடவுள்களுக்கு மது படைக்கவேண்டும். (ராமாயணம்)

2. அரசர்க்கு சூது உரியது. (பாரதம்)

3. கடவுள்களே விபசாரம் செய்திருக்கின்றன. (கிருஷ்ணன், முருகன்) விபசாரிகளை அனுமதிக்கின்றன. (தேவதாசிகள் முறை)

4. வட்டி வாங்குவது வருணாச்சிரம முறை. (வைசிய தர்மம்)

5. கடவுள்கள் யுத்தம் செய்திருக்கின்றன. யுத்தம் அரச நீதி, அரச தர்மம். (கந்தப்புராணம், பாரதம், ராமாயணம்)

மதக்கொள்கைகள், திட்டங்கள் ஆகியவைகளில் இந்து மதம், இஸ்லாம் மதம், கிருஸ்தவ மதம் ஆகிய மதங்கள் எல்லாம் ஒன்றே.

கடவுள்

இந்து மதத்தில் பல கடவுள்கள் உண்டு.

இஸ்லாம், கிறிஸ்து மதங்களில் ஒவ்வொரு கடவுள் தான் உண்டு.

கடவுள் சாயல்

இந்துமதம் கடவுளை மனிதனாகவே மனித ரூபகமாகவே பாவிக்கிறது. இஸ்லாம்மதம் கடவுளை மனிதனாகக் கூறுகிறது. அதாவது கடவுளை ஆண்டவன் அவன் இவன் என்று சொல்லுகிறது.

உலக சிருஷ்டி

இந்து மதம் கடவுளால் உலகம் சிருஷ்டிக்கப்பட்டது என்று கூறுகிறது.

இஸ்லாம் மதமும் உலகம் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதென்றே கூறுகிறது.

பாவ புண்ணியக் கணக்கு

இந்து மதத்தில் மனிதனுடைய செய்கையை குறித்து வைத்து பாவ புண்ணியம் கணக்கு வைக்கப்படும். சித்திரபுத்திரன் எழுதி வைப்பார்.

இஸ்லாம் மதத்தில் மனிதனுடைய செய்கைகளைக் குறித்து பாவ புண்ணியம் கணக்கு வைக்கப்படும். இரண்டு தூதர்கள் எழுதி வைப்பார்கள்.

சொர்க்க நரகம்

இந்து மதத்தில் மனிதனுடைய பாவத்துக்கு நரகமும் புண்ணியத்துக்கு சொர்க்கமும் உண்டு.

இஸ்லாம் மதத்தில் மனிதனுடைய செய்கைக்கு பாவத்துக்கு நரகம், புண்ணியத்துக்கு சுவர்க்கமும் உண்டு.

ஏழு நரகம்

இந்துக்களுக்கு 7 நரகம் உண்டு.

இஸ்லாம்களுக்கு 7 நரகம் உண்டு.

தூதர் பிசாசு

இந்துக்களுக்கு தேவ தூதர்களும் பிசாசும் உண்டு.

இஸ்லாம் மதத்துக்கும் தேவ தூதர்களும் பிசாசுகளும் உண்டு.

நான்கு வேதம்

இந்துக்கள் வேதங்களுக்கு ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு பெயர்கள்.

இஸ்லாம் வேதத்துக்கு தைரத்து, ஜபூரு, இஞ்சிலு, குர்ஆன் என நான்கு பெயர்கள்.

அவதார புருஷர்

இந்துக்களுக்கு அவதார புருஷர்கள் தெய்வாம்ச புருஷர்கள் ஆகிய லக்ஷக்கணக்கான ஆழ்வார்கள், நாயன்மார்கள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் லக்ஷக்கணக்கான தேவதூதர்கள், நபி மார்கள் ஆகியவர்கள் உண்டு.

புண்ணிய ஸ்தலங்கள்

இந்துக்கு புண்ணிய ஸ்தலங்கள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் புண்ணிய ஸ்தலமுண்டு.

பண்டிகை

இந்துக்களுக்கும் பண்டிகை விரதாதிகள் உண்டு.

முஸ்லீம் மார்க்கத்துக்கும் பண்டிகை விரதங்கள் உண்டு.

தொழுகை

இந்துக்களுக்கும் தொழுகை, பிரார்த்தனை இவற்றிற்கு முறைகள், கணக்குகள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் தொழுகை பிரார்த்தனை கணக்குகள் முறைகள் உண்டு.

தான தர்மம்

இந்துக்களுக்கும் தான தர்மங்கள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்திலும் தான தர்மங்கள் உண்டு.

விசேஷ நாள்

இந்துக்களுக்கு விசேஷ நாள், ஓய்வு நாள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்திலும் விசேஷ நாள் ஓய்வு நாள் உண்டு.

மற்றவர்கள் மட்டமானவர்கள்

இந்துக்கள், இந்து அல்லாதவர்களை மிலேச்சர்கள் என்கிறார்கள்.

இஸ்லாம் மதத்தில் இஸ்லாம் அல்லாதவர்களை காபர்கள் என்கிறார்கள்.

உள் பிரிவு

இந்து மதத்திலும் உள் பிரிவுகள் உண்டு.

இஸ்லாம் மதத்தில் உள் பிரிவினர்கள் உண்டு.

யுத்தம்

இந்து மதத்தில் மத யுத்தம் நடந்திருக்கிறது.

இஸ்லாம் மதத்திலும் மத யுத்தம் நடந்திருக்கிறது.

சடங்கு

இந்து மதத்திலும் சடங்குகளும் மந்திரங்களும் உண்டு.

இஸ்லாம் மதத்திலும் சடங்குகள் மந்திரங்கள் உண்டு.

செத்தவர் சரீரம்

இந்து மதத்திலும் செத்தவர்களுக்கு சரீரம் கொடுக்கப்பட்டு விசாரணை நடக்கும்.

இஸ்லாம் மதத்திலும் செத்தவர்கள் எழுப்பப்பட்டு விசாரணை நடக்கும்.

சமாதுக்கு கிரிகை

இந்து மதத்திலும் இறந்து போன பிணத்துக்கு கிரிகைகள், மந்திரங்கள், மரியாதைகள் உண்டு.

இஸ்லாம் மதத்துக்கும் இறந்து போன பிணத்துக்கு கிரிகைகள், மந்திரங்கள், மரியாதைகள் உண்டு.

சமாது வணக்கம்

இந்துக்களுக்கும் சமாது வணக்கம் உண்டு.

இஸ்லாம்களுக்கும் சமாது வணக்கம் உண்டு.

புனித ஸ்தலங்கள்

இந்துக்களுக்கும் சிலர் புதைக்கப்பட்டதற்கு (அடக்கமானதற்கு) ஆக விசேஷ ஸ்தலங்கள் உண்டு.

இஸ்லாம்களுக்கும் சிலர் புதைக்கப்பட்டதற்காக விசேஷ ஸ்தலங்கள் உண்டு.

மேல்கண்ட அனேக விஷயங்களில் கிறிஸ்தவ மதமும் இதை அனுசரித்தேதான் இருக்கின்றது.

ஆகவே பொதுவாக மதம் என்றால் கடவுள், நல்வினை, தீவினை, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் இறந்த பிறகு இவைகளை அனுபவித்தல் சடங்கு மந்திரங்கள் என்பவை இல்லாமல் எந்த மதமும் இருக்க முடிவதில்லை.

ஒருமனிதன் கடவுள் என்பதை ஒப்புக்கொண்டு சொர்க்க நரகம், நல்வினை, தீவினை, பாவம் புண்ணியம் ஆகியவைகளை ஒப்புக்கொள்ளா விட்டால் நாஸ்திகனாய் விடுகிறான்.

நல்வினை தீவினை என்பவைகளோ மதத்துக்கு ஒரு விதமாய் இருக்கிறது. இந்துவுக்கு கள் குடிப்பது பாவமல்ல. முஸ்லீம்களுக்கு கள் குடிப்பது பாவம். முஸ்லீமுக்கு மாட்டைக் கொல்வது தின்பது பாவமல்ல. இந்துவுக்கு மாட்டைக் கொல்வது தின்பது பாவமாகும். இதுபோல் இன்னும் அனேக விஷயம் உண்டு. ஆதலால் மதம் என்பது எல்லோருக்கும் ஒன்று போலவே இருந்தாலும் மத சம்பிரதாயம் வேறு வேறாய் இருந்து வருகிறது.

மத சம்பிரதாயங்களைப் பார்க்கும் போது சொர்க்க நரக விஷயத்தில் எல்லா மதங்களும் ஒன்றுபோல்தான் என்றும், நல்வினை தீவினை என்பதும், பாவ புண்ணியம் என்பதும் எல்லா மதத்திலும் கட்டுப்பாடுகள் என்றும், ஆனால் அந்த அந்த மதக்காரர்களின் காலதேசத்துக்கு தக்கபடி சௌகரியத்துக்கு தக்கபடி ஏற்பாடு செய்து கொள்ளப்பட்டவைகள் என்றும் விளங்கும்.

--------------- தந்தைபெரியார் - “குடி அரசு” கட்டுரை 03.05.1936

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...