Saturday, May 27, 2017

பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (2)

 பேராசிரியர், முனைவர் ந.க.மங்கள முருகேசன் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறையில் பரிதிமாற் கலைஞர் அரங்கில் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி...
அவ்வளவு சிறப்பான புத்தகம். அதனை அவரே மொழி பெயர்க்க வேண்டும் என்றும், அதனைத் தாங்களே வெளியிடுவதாகச் சொல்லித் தமிழில் இந்து முக்காலி என்று எழுதியதை உண்மை விளக்கம் பதிப்பகம் எனப் பெயரிட்டு வெளியிட்டார் என்றால் நம் தமிழர் தலைவரின்உள்ளம் எவ்வளவு பேருள்ளம்.
அதில் மக்களிடையே தோன்றும் பிணக்குகள் பற்றி அறிந்து கொள்வதற்கு ஒரு தவிர்க்க முடியாத அறிவு யாதெனில் விஞ்ஞான ரீதியானதும் பொது நோக்குடைய கல்வியே ஆகும் என்பார் சுப்பிரமணியனார்.
இந்துத்துவா என்று நாம் கூறுவதினுடைய மூன்று நிறுவனங்கள் அடிப்படையானவை என்று கூறி அந்த மூன்று நிறுவனங்கள் ஜாதி வேறுபாடுகள், கூட்டுக்குடும்பம், கர்மா, இந்த மூன்றும் அகற்றப்பட்டால் இந்துத்துவத்தின் தன்மையே மாறிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் சுப்பிரமணியன்
ஆசிரியர் பற்றி பேராசிரியர் மனந்திறந்து எழுதியவை
“உண்மையான நண்பர்கள் மிகச் சிலரே. அவர்களில் ஒருவர் வீரமணி அவர்கள் முக்கிய மானவர். உடுக்கை இழந்தவன் கைபோல் உதவிக்கு வருகிறவர். எனது இரண்டு நூல்களை அவர் செலவில் அச்சிட்டு வெளியிட்டார். அவர் தான் தஞ்சையில் நிறுவியுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் பல சான்றோர்களின் முன்னிலையில் ஒரு தனி நிகழ்ச்சியில் தலை சிறந்த அறிவுக்கருவூல செவ்வியாளர் என்று விருது அளித்து கவுரவித்தார். இது 2008 செப்டம்பர் திங்களில் நிகழ்ந்தது” என்று எழுதியிருக்கிறார். தந்தை பெரியார் இயக்கத்தில் பார்ப்பனர்களுக்கு இடமில்லை. ஆனால் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் டி.லிட்பட்டம் வழங்கித் தகுந்தவர்களைப் பாராட்டும்.
170 நூல்களில் Sanfam Polity சங்க காலத்தை கி.மு. 3 முதல் 3 வரை என வரையறை செய்த சிறப்பான படைப்பு.
கீழ்க்கண்ட நூல்களில் சர்ச்சைக்குரியவை
1) Hindu Tripod
2) Brahmin in Tamil Country
3) A Psychobiography of C.Subramania Bharilss
4) Gandhi and his associates
5) Epic Muslimks
6)  தர்மதேவதை
7) திருக்குறள் கட்டுரைகள்
தர்மதேவதையை மட்டும் சுட்டிக்காட்டுவேன் நேரமின்மையால்
இக்கட்டுரையில் துரோணர் ஏகலைவனிடம் குருதட்சணையாகக் கட்டை விரலைக் கேட்கிறார். இதற்கு ஏகலைவன், “எனது வலது கட்டை விரலால் உங்களுக்கு ஆகக்கூடியது ஒன்றுமில்லை. நான் வேட்டை ஆடி ஜீவனம் செய்பவன். கொடுக்க முடியாது “என்று மறுக்கும் விதத்தில் ஏகலைவன் கதையையே மாற்றி இதுதான் தர்மம் என்று எழுதிய துணிச்சல்காரர் பேரா.சுப்பிரமணியன்.
கொள்கை அடிப்படையில் ஆசிரியர் அவர் களுக்கு முற்றிலும் மாறுபட்டவர். ஆனால் அவர் நட்புடன் பழகியமைக்கு ஒரு நிகழ்வு.
Psycho Biography of C.Subramania Bharathiar எனும் புத்தகம் ஒன்றை எழுதித் தம் மகன் சுந்தரேசனிடம் கொடுத்து “நீ வீரமணி வீட்டிற்குச் செல். அங்கே அவருடைய வாழ்விணையர் இருப்பார். நான் கொடுத்தேன் என்று சொல்லி என்னிடம் பேசச்சொல். இல்லையென்றால் பார்க்க வேண்டும் என்று சொல்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.
அவருடைய மகன் சுந்தரேசன் அவர்களும் ஆசிரியருடைய இணையர் திருமதி மோகனா அம்மையாரிடம் வந்து புத்தகத்தைக் கொடுத்திருக் கிறார். அந்த ஆங்கிலப் புத்தகத்தில்,
“DEDICATED TO Mrs. MOHANA VEERAMANI. A MODEL REPRESENTATIVE OF RESPECTED WOMANHOOD
என்று போட்டிருக்கிறார்.
காலமானபோது
பேராசிரியர் காலமானபோது சென்னையிலிருந்து இறுதி அஞ்சலி செலுத்த உடுமலைப்பேட்டை சென்ற ஆசிரியர், பார்ப்பனராயிற்றே, பார்ப்பனர்கள் இறந்துவிட்டால், தாயானாலும், தந்தையானாலும் வீட்டிற்கு வெளியே கிடத்திவிடுகிறார்கள். அது டெட்பாடி அவ்வளவுதான் என்று எண்ணி அங்கே - சென்று பார்த்தால் கண்ணாடிப் பேழையில் உடல் இருந்தது.
அங்கே தலைப்பகுதியில் மறைந்த பேராசிரியரின் வாழ்விணையர் படம், பக்கத்திலேயே ஆசிரியரும், அவருடைய வாழ்விணையரும் இருக்கும் படம். அதைப்பார்த்தபோது ஆசிரியரின் கண்கள் பனித்து விட்டன.
அவருடைய மகன் சுந்தரேசன் சொன்னது. அப்பா நான் இறந்தால் இந்த மாதிரி முறையில் தான் செய்ய வேண்டும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதே. அவர்கள் படம் இருக்க வேண்டும் “கடைசியாக என்னுடன் அவர்கள் இருந்தார்கள் என்ற எண்ணம் வரவேண்டும்“ என்று சொல்லியிருக்கிறார் பேராசிரியர். உண்மையில் உணர்வூட்டமான நிகழ்வு.
தோழர்
ஈ.வெ.ரா.நாகம்மையார்
தந்தை பெரியார் வாழ்க்கைச் சரித்திரத்தில் முன் பகுதியை நிறை ஏற்படுத்தியவர் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார். அடுத்த பகுதியில் நிறை செய்தவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்.
அன்னை நாகம்மையார் வரலாறு திராவிட இயக்க முன்னணிப் பெண்மணி ஆனபோதிலும் இருட்டில் இருக்கிறது. எனவே தான் இந்த அறக்கட்டளைப் பொழிவிற்கு நாகம்மையார், மணியம்மையார் ஆகி யோரைத் தலைப்பாக் கொண்டேன்.
நாகம்மையார் நன்கு அறியப்படாதவர், அவரு டைய தொண்டு, பணி, சிறப்பு குறித்து, திராவிடர் கழகத் தோழர்களே நன்கு அறியவில்லை. மணியம்மையார் தவறாக விமரிசிக்கப்பட்டவர்.
இருவர் வாழ்க்கை வரலாற்றையும் தோழர் ஈ.வெ.ரா.நாகம்மையார், தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் என இருபெரும் நூல்களைப் படைத்திருக்கிறேன். அன்னை நாகம்மையார் சுயமரியாதை இயக்கத் தாய் என்றால் அன்னை மணியம்மையார் திராவிட இயக்கத்தாய். இருவருக்கும் உள்ள ஒற்றுமை, இந்த இருவரும் இல்லை என்றால் நம் சமுதாயத்திற்குத் தந்தை பெரியாரின் தொண்டு இல்லை. பெரியாரே இல்லை. இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றும் அல்ல. ஆம்! பெரியாரே இல்லை, சமூகநீதி இல்லை. நாம் எல்லாம் படிப்பு, பதவி பெற வாய்ப்பு இல்லை.
இருவருக்கும் உள்ள வேறுபாடு என்றால் - அன்னை நாகம்மையார் தேசிய இயக்கமும் சரி, சுயமரியாதை இயக்கமும் சரி - இரண்டு இயக்கங்களும் கொண்டாட வேண்டிய பெண்மணி.
அன்னை மணியம்மையார் திராவிட இயக்கம் கொண்டாட வேண்டிய தியாக மெழுகுவர்த்தி. தந்தை பெரியாரைத் தொண்ணூற்று அய்ந்து ஆண்டுக்காலம் வாழவைத்துத் தன் வாழ்க்கையை 58 ஆண்டுக்குள் சுருக்கிக் கொண்டவர்.
நாகம்மையார் வாழ்க்கை ஏட்டின் இரு பகுதிகளில் அவர் வாழ்ந்த 48 ஆண்டுக்கால வாழ்க்கையில் முதல் பகுதி தேசிய இயக்க வீராங்கனை. இரண்டாம் பகுதி சுயமரியாதைத்தாய்.
திரு. வி.க. சுருக்கமாகக் குறிப்பிடுவதே இதற்குச் சான்று. “நாகம்மையார் பெண்மைக்கு ஓர் உறையுள். வீரத்திற்கு ஒரு வைப்பு. காந்தியத்திற்கு ஓர் ஊற்று. சமூகநீதிக்கு ஒரு தூண். சாதியத்திற்கு எதிரான வீரவாள்”.
இந்திய தேசிய காங்கிரஸ் பிறந்த ஆண்டில் பிறந்தவர் என்று மட்டும் யூகிக்கின்ற அவர் தமிழ் நாட்டுக் காங்கிரசின் முதல் பிரதேசக் காங்கிரசு உறுப்பினர். இது வரலாற்று உண்மை.
நாகம்மையார் யார்?
தந்தை பெரியாரே கூறக்கேட்போம் “நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும், எனக்கு வாழ்வில் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதரவாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்“.
1933இல் நாகம்மையார் உயிரோடிருந்த வரை யிலும் தந்தை பெரியார் இல்லம் எப்பொழுதும் விருந்துக் கூடமாகவே இருந்தது. ஏனென்றால் நாகம்மையாரின் கொள்கைகள் இரண்டே.
ஒன்று தந்தை பெரியார் எப்பணியில் ஈடுபட் டாலும் தானும் உறுதுணையாக இருப்பது.
இரண்டு தம் இல்லம் வரும் எல்லோருக்கும் முகஞ்சுளியாது உணவு வழங்குவது.
அதனாலே தான் தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தவரை அன்னை நாகம்மையார் பட்டாடை துறந்து முரட்டுக் கதர்ச்சேலையை அணிந்தார்.
1921இல் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுக் காந்தியிடம் அப்போராட்டத்தை நிறுத்தி விடலாம் என்று மண்ணுருண்டை மாளவியா எனத் தந்தை பெரியார் கூறியவர் கூறியபோது அது என் கையில் இல்லை, ஈரோட்டில் இரு பெண்கள் கையில் என அதில் ஒரு கை நாகம்மாள் என்பது இன்று நாடறிந்த செய்தி.
நாடறியாத முதல் செய்தி. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முதல் பெண்மணி. 4.12.1923 திருச்சி தெப்பக்குளம் முனிசிபல் சத்திரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரசின் முதல் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5.12.1923 சுதேசமித்திரன் வெளியிட்ட செய்தி இது.
அடுத்த இரண்டாவது நிகழ்ச்சியைத் திரு. வி.க.வே கூறக்கேட்போம்.
“வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார் தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்துவான் வேண்டி வைக்கம் சத்தியாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூடினார்.
வைக்கம் வீரர் என்று தந்தை பெரியாரைப் பாராட்டுகிறோம். ஆனால் வைக்கம் வீராங்கனை நாகம்மையாரைக் குறிப்பிடத்தவறுகிறோம்.
தந்தை பெரியார் வைக்கம் அறப்போரில் ஒரு மாதம் சிறைப்பட்டு விடுதலை ஆனதும், பிரஷ்ட உத்தரவு போடப்பட்டு மீறியதற்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை பெற்று திருவாங்கூர் சிறையில் அடைக்கப்ட்டார்.
அப்போது நாகம்மையார் விடுத்த அறிக்கை 12.9.1924 நவசக்தியில் (பக்கம் 8) வெளியானது.
“என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10 மணிக்கு 11.9.1924 மறுபடியும் இராஜத்துரோக குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாக சொல்லி விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார். அவர் திரும்பத்திரும்பத் தேச ஊழியத்தின் பொருட்டுச் சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டுமென்றும், அதற்காக அவருக்கு ஆயுள்வளர வேண்டும் என்றும் கடவுளையும் மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கிறேன்.
அவர் பாக்கி வைத்து விட்டுப் போனதாக நினைத்துக்கொண்டு போகிற வரைக்கும் சத்தியாகிரக விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து அதைச்சரியாக அகிம்சா தருமத்துடன் நடத்த அனுகூலமான முடிவுக்கு வர தலைவர்களையும் தொண்டர்களையும் பக்தியோடு பிரார்த்திக் கொள்கிறேன்.”
நாகம்மையார் வைக்கம் அறப்போரை வெற்றி பெறச் செய்தவர். தோழர் எஸ்.இராமநாதன், தமிழகத்துத் தேசிய இயக்கப் பெண்டிரைச் சேர்த்துக் கொண்டு போராட்டக் களத்தில் வீராங்கனையாக விளங்கினார். திருவாங்கூர் அரசில் சுற்றுப்பயணம் செய்து போராட்டத் தீ அணையாமல் காத்தார். மகளிர் பிரிவு அமைத்து வீதியில் அமர்ந்து, இராட்டையில் நூல் நூற்று நிதி திரட்டிப் பிடி அரிசி பெற்று போராட்டத்திற்கு உயிர் கொடுத்தார். போக்குவரத்துக்குத் தடையாய் இருந்ததாக குற்றஞ்சாட்டடப்பட்டு அய்ந்து ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டடு அதைக் கட்ட மறுத்து கோர்ட்டு கலையும் வரை சிறைப்பட்டார். விசாரணைக்கு முந்தி எட்டு நாள் ரிமாண்டில் அடைக்கப்பட்டார். தமிழ்நாட்டில் விடுதலைப் போரில் சிறை சென்ற முதல் பெண்மணிகள் நாகம்மையாரும் கண்ணம்மாளும் தான்.
யார்யாருக்கோ சிலை வைக்கிற, தெருக்களுக்குப் பெயர் வைக்கிற,ஸ்டாம்ப் வெளியிடுகிற தேசீயம் பேசுவோர் நாகம்மையார் தொண்டை உணரவில்லை என்பது வேதனைக்குரியது இன்றாவது செய்வார்களா?
சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கம் குடும்ப உறவோடு விளங்கியது எனில் அதற்குத்தந்தை பெரியார், தாயார் நாகம்மையார். தந்தை பெரியார் நடத்திய சுயமரியாதை மாநாடுகளில் பங்கேற்றார். தந்தை பெரியாருடன் மலேசியப் பயணம் சென்று வந்தார்.
தந்தை பெரியார் மேல்நாட்டுச் சுற்றுப்பயணம் செய்த 1923 டிசம்பரில் பத்து மாத காலம் மேல்நாட்டுப் பயணம் புறப்பட்டபோது ஏற்பட்ட உடல் வலியையும் பொருட்படுத்தாமல் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும், “குடி அரசுப்” பத்திரிகைகையயும் தளராமல் நடத்தியவர். எனவே தான் 1950இல் சிவகாமி சிதம்பரனார் எழுதிய வரிகள் மெய்ப்பிக்கும். “ஈ.வெ.ரா. சுற்றுப்யபயணத்திலிருந்த சுமார் 10 மாதங்களுக்கும் சுயமரியாதை இயக்கமானது அதற்கு முன் செய்த வேலையை விட அதிக வேலை செய்தது. இதற்குக் காரணம் அன்னையார் இயக்கத்தோழர்களுக்கு அளித்த உற்சாகமேயாகும். தந்தை பெரியார் சுயமரியாதை வீரர் ஆன போதிலும் அவரையே விஞ்சக்கூடிய சாதனை நிகழ்த்திய பெண்மணி அவர்”.
தாலியைப் புனிதமாக ஒரு காலத்தில் கருதியவர் தாலி கட்டாத ஒரு புரட்சித் திருமணத்தை நடத்தியவர்.
25.7.1929இல் கோபாலகிருஷ்ணன் - ஆர்.என்.லட்சுமி விதவா விவாகம் சடங்குகள் ஒழித்த திருமணம், தந்தை பெரியார் இல்லத்தில் நாகம்மையாரால் குத்தூசி - குருசாமி - குஞ்சிதம் அம்மையார், சிவகாமி - சிதம்பரனார். நீலாவதி ராமசுப்பிரமணியம்! திருமணங்களைத் தந்தை பெரியாருடன் இணைந்து நடத்தினார்.
12.9.1932 இரவு 9.30 மணிக்கு நாகம்மையார் தலைமையில் திரு. முருகன் - திருமதி. செல்லம்மாள் திருமணம் மாலை மட்டும் சூடித் தாலிக் கட்டாமல் நடைபெற்றது. தந்தை பெரியார் இல்லாமல் நடைபெற்ற மணம். இது நடைபெற்றது இன்றைக்கு 84 ஆண்டுகளுக்கு முன், நிகழ்த்தியவர் நாகம்மையார்.
பத்திரிகை வெளியீட்டாளர்
“குடி அரசு” என்பது அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி விசாலப் பார்வையால் வீறு கொண்ட மனித நேயத்தின் ஒளிக்கதிர். ஓய்வறியாப் போர் வீரரான தலைவர் பெரியாரின் முனை மழுங்காப் பகுத்தறிவு ஆயுதம் என்பார். அந்த “குடிஅரசை” தந்தை பெரியார் அய்ரோப்பியப் பயணம் செய்தபோது  வெற்றிகரமாக நடத்தியவர் அன்னையார்.
1928இல் வெளியான ரிவோல்ட் தந்தை பெரியாரை ஆசிரியராகவும், நாகம்மையாரை வெளியீட்டாளராகவும் கொண்டு வெளிவந்த ஏடு.
நாகம்மையார் 11.5.1933 மறைந்தார். தந்தை பெரியாரின் இரங்கல் செய்தி 14.5.1933இல் வெளியாயிற்று. இந்த இரங்கல் செய்தி தந்தை பெரியார் எத்தகைய மனிதர்? மனைவி மீது அன்புப் பிடிப்புடையவர் என்று காட்டும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...